அகர ழகர சிகரம்

கவிதைகள்

பெண் தெய்வம்!

நடை பயின்ற என் இள வயதில்

விரலில் வான் நீர் படவேண்டி, தன் மகன்

ம​ழையில் குட்டிக்கரம் நீட்டக் கண்ட

என் அன்னை, என்னைக் கட்டியணைத்தார்.

மீசை முளைத்த இளம் பருவத்தில்

அலையெனும் தலைமுடி கோதி,

கன்னிக்கெய்திய காதலம்புக்குப் பதில்?

அம்மா​வின் அனலம்பு எரி முறைப்பு!

இருபது வய​தில், காதலெனும் குமிழ்

வாழ்வு கிட்டினும், ஒவ்வா உறவுத் ​தீ

ஓர் இமைக் கணம், பற்றிய துரிதத்தில்

புகைந்து கசந்து பிரிந்து அணைந்தது.

ஆண்டுகள், காலின்றி ஓடியதன் விளைவாக

அறிவற்ற அறிமுகமும், அழகில்லாத் திருமுகமும்

கண்ட (இ)வன், எல்லாம் வல்ல திருவருளை, ஒருநாள்

அருந்தாய் திருவுருவாக நேரெதிரே கண்டான்!

வா​ழ்க சுபமாய், எனவென்றும் வாய் நிறைய

வா​ழ்த்துகிறாயே – குடும்ப மர அடிவேராய்

என்றென்றும் நிமிர்ந்து நிற்கும், ஒப்பாரும்

மிக்காருமற்ற அன்னை பெண்​ தெய்வமே!

(அன்னைக்கு எவ்வகையிலும் நன்றி நவிலும் வ​​​​​ழியறியாது விழித்து நிற்கும் ​மகனாக இம்மண்ணில் அவ​தரித்தவன்)

-- என்.எஸ்.நாராயணன்

குலம் காக்க வந்தனள்...

கண்ணிரண்டு, காதிரண்டு,

கையிரண்டு, நா​சிக்

கோபுரமிரண்டு,

முப்பத்திர​ண்டு

சொத்துப் பெட்டகத்தில்

சிட்டுக்குத் தற்போதிருப்ப​து

நாலிரண்டு மட்டுமே!

திருமகளே குலமகளே – தன்

சிறு வாய்த் தேன் உமிழ்நீர்

அமிழ்ந்தூறும் தருவாயில்

திருக்குட நன்னீராட்டே காண்கிறோம்

மண்ணளக்கும் உன் திருவாயில்

குலம் காக்​க வந்த

கண்மணியே – அன்னபூரணியே

தவப் பயனடைந்தோம்

தன்யரும் ஆனோம் –

இப்பிறவியிலேயே!

முதலாம் பிறந்தநாள் காணும்

மாசற்ற குலவிழுதே!

முதலும் வட்டியுமான உனக்கு

உள்ளம் திரளும் அன்புநெய் தடவிய

அனைவரின் ஆசிகள்!

- என்.எஸ்.நாராயணன்

நிறைவே(ற்)றிய கைம்​மாறு

உலகறியா வண்ணம் தாயே

உன்னுள் இவனை வைத்தாய்

உன்னுள் கருவான – இவன் திரு-

உருவானதாய் நினைத்தாய்!

பயிரினம் வந்த விளை நிலத்தில்

உயிரொளி வளர்த்த ஆலயத்தில்

தாய் மணிவயிற்றின் திருநாளே -

தாய்மைக் கணக்கில் வருவாயே!

கருவில் தோளில் மாரில் - உன்னிரு

பொற்கைத் தலத்தில் தஞ்சமளித்தாய்

ஐயிரண்டு திங்களும் திருக்கோவிலில்

சுகமான சுமையைச் சுமந்தாய்!

உதிர நல்லமுதை, நின்சிறை வெளிவந்த

செல்லப் பறவைக்களித்தாய், களித்தாய்

எக்கடன் வாங்கினும் தரலாம் தாயே -

இக்கடன் தருதல் மட்டும் எப்பிறவியில்?

வாழும் வழிகாட்டிய மாதாவே,

மயானத் தளத்தில், நின்னுயிறற்ற

கட்டை​யின் மட்டைக்குத் – தீவைக்கும்

கைமாறு மட்டும் செய்வான் (இத்) தீ (ய) மகன்!

- என்.எஸ்.நாராயணன்

மதியை மதித்தவன்

மதியை மதித்தவன்
வானத்தி்ல் ஏறி
மதியை மிதித்துவந்தான் - தலை
விதியை நம்பி
விழுந்தவனே! நீ
விழுந்தே கிடக்கின்றாய்

கைகளில்தான் உன்
வரும்காலம் அது
கைகளிலின் சக்தியிலே - வெறும்
பொய்களின் வழியில்
போனவனே! அதை
ரேகையில் தேடுகிறாய்

கோளும் நாளும்
குறித்தது ராமன்
கொற்றவன் ஆவதற்கு - அந்த
நாளில் என்ன
நடந்தது ? பாவம்
நடந்தான் காட்டுக்கு

காலம் பார்த்து
நடந்தது தானே
கண்ணகி கல்யாணம் - அவள்
கோலம் இழந்து
கொண்டதுவோ மலர்
குங்கும அலங்கோலம்

சாதகம் பார்த்தாய்

சகுனம் பார்த்தாய்

சகலமும் பார்த்தாயே - ஒரு

பாதகம் இன்றி

வாழ்ந்தாயா? வெறும்

பயத்தால் சாகின்றாய்!

- பெருங் கவிக்கோ அப்துல் ரகுமான்

ஓடி விளையாடு பாப்பா

ஓடி விளையாடு பாப்பா, - நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,
கூடி விளையாடு பாப்பா, - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா.
[ஓய்ந்திரு = சோம்பியிரு, சும்மாவிரு; வை = திட்டு; வையாதே = திட்டாதே]

சின்னஞ் சிறு
குருவி போலே - நீ
திரிந்து பறந்துவா பாப்பா,
வண்ணப்
பறவைகளைக் கண்டு - நீ
மனதில்
மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.

கொத்தித் திரியுமந்தக்
கோழி - அதைக்
கூட்டி விளையாடு பாப்பா,
எத்தித் திருடுமந்தக்
காக்காய் - அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா.
[எத்து = ஏமாற்று]

பாலைப் பொழிந்துதரும் பாப்பா, - அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா;
வாலைக் குழைத்துவரும்
நாய்தான் - அது
மனிதர்க்குத்
தோழனடி பாப்பா.

வண்டி இழுக்கும்நல்ல குதிரை - நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மை
ஆடு, - இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா.

[அண்டு = நெருங்கு; பிழை = உயிர்வாழ்]

காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல
பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு - என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா.

பொய் சொல்லக் கூடாது பாப்பா - என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா,
தெய்வம் நமக்குத்துணை பாப்பா - ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா.

[புறஞ்சொல் = முதுகுக்குப் பின்னால் பழி]

பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில்
உமிழ்ந்துவிடு பாப்பா.
[பாதகம் = தீமை]

துன்பம் நெருங்கிவந்த போதும் - நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா,
அன்பு மிகுந்ததெய்வ முண்டு - துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா.

சோம்பல் மிகக்கெடுதி பாப்பா, - தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா,
தேம்பி யழுங்குழந்தை
நொண்டி, - நீ
திடங்கொண்டு போராடு பாப்பா.

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற - எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா,
அமிழ்தில் இனியதடி பாப்பா, - நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா.

சொல்லில் உயர்வு
தமிழ்ச் சொல்லே, - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா;
செல்வம் நிறைந்த ஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா.

[தொழு = கைகூப்பு, கும்பிடு]

வடக்கில்
இமயமலை பாப்பா - தெற்கில்
வாழும்
குமரிமுனை பாப்பா,
கிடக்கும் பெரிய
கடல் கண்டாய் - இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா.

வேத முடையதிந்த நாடு, - நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு,
சேதமில் லாதஹிந்து ஸ்தானம் - இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா.

சாதிகள் இல்லையடி பாப்பா; - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.

உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்; - தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடைய நெஞ்சு வேணும்; - இது
வாழும் முறைமையடி பாப்பா.

- மகாகவி சுப்பிரமணி பாரதி

வருவாய்...வருவாயாய்!

வருவாய் வருவாய் எனக்

காத்திருந்தோம் பல்லாண்டாய்

காலம் கடந்தும் வந்தாய் கடந்தாண்டு

கண்டு உலகே மயங்கிய வருவாயாய்!

கோவில் மணியே - கோமகன் கனியே

கண்டநாள் முதல் - காணாக் கனவான

கண்மணியே, திருமகள் அன்னபூரணியே!

இருண்ட வானில்

விடிவெள்ளி – நீ

வறண்ட வனத்தின்

வானவிலும் நீ

வந்தாய் வரமாய் – எம்

வம்சவிருத்தித் திருவுருவாய்

உன் முகம் தன்னில்

தன் முகம் கண்டான்

என் பேரனாம் உன் தந்தை

தம் மகள் முகத்தினில்

தன்னையே கண்டானாம்

எம் மகன், உன் தந்தையின் தந்தை

ஆயின் உன் முகமதில் – நான்

என் மகன் முகம் கண்டேன்

பெற்றவனைப் பெற்றவனின் பெற்றோர்

ஐந்து மாமாங்கம் இளமை ஆனோம்

நற்குலம் காக்கவந்த

குலக்கொடியே – குழலமுதே

சீர்மேவும் சிரஞ்சீவியாக

ராம காதை சஞ்சீவியாக

சோறுடைத்த சோழமண் எழும்பிய

பெருவுடைக் கோவிற் பொற்சிலையாய் நீ

வாழ்வாங்கு வாழ்கவே -

பல நூறு ஆண்டுகள்!

இந்தப் பாட்டி அப்பத்தாள் –

பாட்டைய்யா இருவரும்

சிந்தித்-தே(ன்) பெருகும் ஆசை

மிகு பரிபூரணாயுள் ஆசிகள்

ஆழ்மனக் குடத்தின் அன்பென்னும் நெய்யை

வாய்மொழி அகப்பையால் வார்த்தெடுத்து

ஒற்றியூ​ற்றி, போற்றிப் பூரிக்கின்றோம்!

- என்.எஸ்.நாராயணன்

அன்னமும் வான்கோழியும்

வாழும் மண்ணிலும், கவியுலக விண்ணிலும்,

அதிசயப் பிறவிகள் வாலியும் கண்ணதாசனும்,

ஐய​மின்றி இருவரும் அன்னப் பறவைகள்..

நம்மைப் போலன்றி, அவதாரமானவர்கள்!!

கான மயிலிரண்டு ஆடக் கண்ட –

வான்கோழிகளாம் ஆட்டமறியா நாமோ -

விழ​லுக்கிரைத்த ​வி​ரய நீராவோம் -

பன்னீர்மழை விழந்தும், சேறாவோம்!

கண்ணன் நாமம் பெற்றவன்

கவியரங்கின் மன்னன் ஆனான்!

திருவரங்கத் தலம் பிறந்தவன்

திரையரங்கத் தளம் ஆண்டான்!

இராம காதையைக் கிழிக்க முற்பட்ட

நாத்திகன், அக்கணமே ஆத்திகனானான்!

இக்காலக் கம்பன் போலானான் – என்றுமே

அழியாக் கண்ணதாசன் ஆனான்!

கவி கம்ப​னே உயிர் கொடுத்து, அவனே

காவியத்தில் உயிரெடுத்த குரங்கு வாலியோ,

குரங்குகளின் அரசன் ஆனான்- அவ்வண்ணம்

கலிகால ரங்கராஜனும் வாலியானான்!

கம்பன் சமைத்த வானவனும் வானரமும்,

அழித்தெழுதாத ஓவியம் ஆயினர் –

சொல் பிறழாத காவியமாயினர் – இறந்தும்

இன்றும் இருக்கின்றனர் கவிஞர் இருவர் !

சைவர் கண்ணதாசன் அறிவுக்கண் திறந்து

குழல் கண்ணனின் கால் தொற்றினார்

வைணவர் வாலியோ கவிவிழி திறந்தது

முதல், முருகன் கூர்வேலினைப் பற்றினார்!

பெருந்தகை கம்பன் வள்ளுவனைப்

போல் பெருங்கவிஞர் இருவரும் - பின்னர்

வந்தவரெல்லாம் கவி பாடி முன்னேற,

சாசுவதமாய்ப் பாதச்சுவடு சமைத்தனர்

மணமிகு கவிதைச் சோலையில்,

மறை இறை வரம் கிட்டிற்று,

மனநிறை கவிக்கொடியின் இரு மலராய்

இதழ் விரிந்த கவிஞறேறு இருவருக்கும்.

கவிப் பூஞ்சோலை மடி விழுந்தாலும்,

பண்-புனையும் வரம் எளிதில் கிட்டாது,

என்றும் பாட்டுக்கட்ட முட்டிமோதிக்

காயமாகும், பாதை தொலைத்த ஆடுகளுக்கு!!

குரல் இருந்தால்தான் பாடப் பாட்டு வரும் –

விரலிருந்தால் மட்டும் வீணை மீட்டவரும்!

கோடானு கோடியில் இரட்டையர் நீங்கலாக

இங்கு எவருக்கினி வரும் - எழுத்தாணி வரம்?

- என்.எஸ்.நாராயணன்