அகர ழகர சிகரம்
கவிதைகள்


பெண் தெய்வம்!
நடை பயின்ற என் இள வயதில்
விரலில் வான் நீர் படவேண்டி, தன் மகன்
மழையில் குட்டிக்கரம் நீட்டக் கண்ட
என் அன்னை, என்னைக் கட்டியணைத்தார்.
மீசை முளைத்த இளம் பருவத்தில்
அலையெனும் தலைமுடி கோதி,
கன்னிக்கெய்திய காதலம்புக்குப் பதில்?
அம்மாவின் அனலம்பு எரி முறைப்பு!
இருபது வயதில், காதலெனும் குமிழ்
வாழ்வு கிட்டினும், ஒவ்வா உறவுத் தீ
ஓர் இமைக் கணம், பற்றிய துரிதத்தில்
புகைந்து கசந்து பிரிந்து அணைந்தது.
ஆண்டுகள், காலின்றி ஓடியதன் விளைவாக
அறிவற்ற அறிமுகமும், அழகில்லாத் திருமுகமும்
கண்ட (இ)வன், எல்லாம் வல்ல திருவருளை, ஒருநாள்
அருந்தாய் திருவுருவாக நேரெதிரே கண்டான்!
வாழ்க சுபமாய், எனவென்றும் வாய் நிறைய
வாழ்த்துகிறாயே – குடும்ப மர அடிவேராய்
என்றென்றும் நிமிர்ந்து நிற்கும், ஒப்பாரும்
மிக்காருமற்ற அன்னை பெண் தெய்வமே!
(அன்னைக்கு எவ்வகையிலும் நன்றி நவிலும் வழியறியாது விழித்து நிற்கும் மகனாக இம்மண்ணில் அவதரித்தவன்)
-- என்.எஸ்.நாராயணன்
குலம் காக்க வந்தனள்...
கண்ணிரண்டு, காதிரண்டு,
கையிரண்டு, நாசிக்
கோபுரமிரண்டு,
முப்பத்திரண்டு
சொத்துப் பெட்டகத்தில்
சிட்டுக்குத் தற்போதிருப்பது
நாலிரண்டு மட்டுமே!
திருமகளே குலமகளே – தன்
சிறு வாய்த் தேன் உமிழ்நீர்
அமிழ்ந்தூறும் தருவாயில்
திருக்குட நன்னீராட்டே காண்கிறோம்
மண்ணளக்கும் உன் திருவாயில்
குலம் காக்க வந்த
கண்மணியே – அன்னபூரணியே
தவப் பயனடைந்தோம்
தன்யரும் ஆனோம் –
இப்பிறவியிலேயே!
முதலாம் பிறந்தநாள் காணும்
மாசற்ற குலவிழுதே!
முதலும் வட்டியுமான உனக்கு
உள்ளம் திரளும் அன்புநெய் தடவிய
அனைவரின் ஆசிகள்!
- என்.எஸ்.நாராயணன்
நிறைவே(ற்)றிய கைம்மாறு
உலகறியா வண்ணம் தாயே
உன்னுள் இவனை வைத்தாய்
உன்னுள் கருவான – இவன் திரு-
உருவானதாய் நினைத்தாய்!
பயிரினம் வந்த விளை நிலத்தில்
உயிரொளி வளர்த்த ஆலயத்தில்
தாய் மணிவயிற்றின் திருநாளே -
தாய்மைக் கணக்கில் வருவாயே!
கருவில் தோளில் மாரில் - உன்னிரு
பொற்கைத் தலத்தில் தஞ்சமளித்தாய்
ஐயிரண்டு திங்களும் திருக்கோவிலில்
சுகமான சுமையைச் சுமந்தாய்!
உதிர நல்லமுதை, நின்சிறை வெளிவந்த
செல்லப் பறவைக்களித்தாய், களித்தாய்
எக்கடன் வாங்கினும் தரலாம் தாயே -
இக்கடன் தருதல் மட்டும் எப்பிறவியில்?
வாழும் வழிகாட்டிய மாதாவே,
மயானத் தளத்தில், நின்னுயிறற்ற
கட்டையின் மட்டைக்குத் – தீவைக்கும்
கைமாறு மட்டும் செய்வான் (இத்) தீ (ய) மகன்!
- என்.எஸ்.நாராயணன்
மதியை மதித்தவன்
மதியை மதித்தவன்
வானத்தி்ல் ஏறி
மதியை மிதித்துவந்தான் - தலை
விதியை நம்பி
விழுந்தவனே! நீ
விழுந்தே கிடக்கின்றாய்
கைகளில்தான் உன்
வரும்காலம் அது
கைகளிலின் சக்தியிலே - வெறும்
பொய்களின் வழியில்
போனவனே! அதை
ரேகையில் தேடுகிறாய்
கோளும் நாளும்
குறித்தது ராமன்
கொற்றவன் ஆவதற்கு - அந்த
நாளில் என்ன
நடந்தது ? பாவம்
நடந்தான் காட்டுக்கு
காலம் பார்த்து
நடந்தது தானே
கண்ணகி கல்யாணம் - அவள்
கோலம் இழந்து
கொண்டதுவோ மலர்
குங்கும அலங்கோலம்
சாதகம் பார்த்தாய்
சகுனம் பார்த்தாய்
சகலமும் பார்த்தாயே - ஒரு
பாதகம் இன்றி
வாழ்ந்தாயா? வெறும்
பயத்தால் சாகின்றாய்!
- பெருங் கவிக்கோ அப்துல் ரகுமான்
ஓடி விளையாடு பாப்பா
ஓடி விளையாடு பாப்பா, - நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,
கூடி விளையாடு பாப்பா, - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா.
[ஓய்ந்திரு = சோம்பியிரு, சும்மாவிரு; வை = திட்டு; வையாதே = திட்டாதே]
சின்னஞ் சிறுகுருவி போலே - நீ
திரிந்து பறந்துவா பாப்பா,
வண்ணப் பறவைகளைக் கண்டு - நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.
கொத்தித் திரியுமந்தக் கோழி - அதைக்
கூட்டி விளையாடு பாப்பா,
எத்தித் திருடுமந்தக் காக்காய் - அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா.
[எத்து = ஏமாற்று]
பாலைப் பொழிந்துதரும் பாப்பா, - அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா;
வாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா.
வண்டி இழுக்கும்நல்ல குதிரை - நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மைஆடு, - இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா.
[அண்டு = நெருங்கு; பிழை = உயிர்வாழ்]
காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு - என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா.
பொய் சொல்லக் கூடாது பாப்பா - என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா,
தெய்வம் நமக்குத்துணை பாப்பா - ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா.
[புறஞ்சொல் = முதுகுக்குப் பின்னால் பழி]
பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.
[பாதகம் = தீமை]
துன்பம் நெருங்கிவந்த போதும் - நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா,
அன்பு மிகுந்ததெய்வ முண்டு - துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா.
சோம்பல் மிகக்கெடுதி பாப்பா, - தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா,
தேம்பி யழுங்குழந்தை நொண்டி, - நீ
திடங்கொண்டு போராடு பாப்பா.
தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற - எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா,
அமிழ்தில் இனியதடி பாப்பா, - நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா.
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா;
செல்வம் நிறைந்த ஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா.
[தொழு = கைகூப்பு, கும்பிடு]
வடக்கில் இமயமலை பாப்பா - தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா,
கிடக்கும் பெரியகடல் கண்டாய் - இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா.
வேத முடையதிந்த நாடு, - நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு,
சேதமில் லாதஹிந்து ஸ்தானம் - இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா.
சாதிகள் இல்லையடி பாப்பா; - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.
உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்; - தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடைய நெஞ்சு வேணும்; - இது
வாழும் முறைமையடி பாப்பா.
- மகாகவி சுப்பிரமணி பாரதி
வருவாய்...வருவாயாய்!
வருவாய் வருவாய் எனக்
காத்திருந்தோம் பல்லாண்டாய்
காலம் கடந்தும் வந்தாய் கடந்தாண்டு
கண்டு உலகே மயங்கிய வருவாயாய்!
கோவில் மணியே - கோமகன் கனியே
கண்டநாள் முதல் - காணாக் கனவான
கண்மணியே, திருமகள் அன்னபூரணியே!
இருண்ட வானில்
விடிவெள்ளி – நீ
வறண்ட வனத்தின்
வானவிலும் நீ
வந்தாய் வரமாய் – எம்
வம்சவிருத்தித் திருவுருவாய்
உன் முகம் தன்னில்
தன் முகம் கண்டான்
என் பேரனாம் உன் தந்தை
தம் மகள் முகத்தினில்
தன்னையே கண்டானாம்
எம் மகன், உன் தந்தையின் தந்தை
ஆயின் உன் முகமதில் – நான்
என் மகன் முகம் கண்டேன்
பெற்றவனைப் பெற்றவனின் பெற்றோர்
ஐந்து மாமாங்கம் இளமை ஆனோம்
நற்குலம் காக்கவந்த
குலக்கொடியே – குழலமுதே
சீர்மேவும் சிரஞ்சீவியாக
ராம காதை சஞ்சீவியாக
சோறுடைத்த சோழமண் எழும்பிய
பெருவுடைக் கோவிற் பொற்சிலையாய் நீ
வாழ்வாங்கு வாழ்கவே -
பல நூறு ஆண்டுகள்!
இந்தப் பாட்டி அப்பத்தாள் –
பாட்டைய்யா இருவரும்
சிந்தித்-தே(ன்) பெருகும் ஆசை
மிகு பரிபூரணாயுள் ஆசிகள்
ஆழ்மனக் குடத்தின் அன்பென்னும் நெய்யை
வாய்மொழி அகப்பையால் வார்த்தெடுத்து
ஒற்றியூற்றி, போற்றிப் பூரிக்கின்றோம்!
- என்.எஸ்.நாராயணன்
அன்னமும் வான்கோழியும்
வாழும் மண்ணிலும், கவியுலக விண்ணிலும்,
அதிசயப் பிறவிகள் வாலியும் கண்ணதாசனும்,
ஐயமின்றி இருவரும் அன்னப் பறவைகள்..
நம்மைப் போலன்றி, அவதாரமானவர்கள்!!
கான மயிலிரண்டு ஆடக் கண்ட –
வான்கோழிகளாம் ஆட்டமறியா நாமோ -
விழலுக்கிரைத்த விரய நீராவோம் -
பன்னீர்மழை விழந்தும், சேறாவோம்!
கண்ணன் நாமம் பெற்றவன்
கவியரங்கின் மன்னன் ஆனான்!
திருவரங்கத் தலம் பிறந்தவன்
திரையரங்கத் தளம் ஆண்டான்!
இராம காதையைக் கிழிக்க முற்பட்ட
நாத்திகன், அக்கணமே ஆத்திகனானான்!
இக்காலக் கம்பன் போலானான் – என்றுமே
அழியாக் கண்ணதாசன் ஆனான்!
கவி கம்பனே உயிர் கொடுத்து, அவனே
காவியத்தில் உயிரெடுத்த குரங்கு வாலியோ,
குரங்குகளின் அரசன் ஆனான்- அவ்வண்ணம்
கலிகால ரங்கராஜனும் வாலியானான்!
கம்பன் சமைத்த வானவனும் வானரமும்,
அழித்தெழுதாத ஓவியம் ஆயினர் –
சொல் பிறழாத காவியமாயினர் – இறந்தும்
இன்றும் இருக்கின்றனர் கவிஞர் இருவர் !
சைவர் கண்ணதாசன் அறிவுக்கண் திறந்து
குழல் கண்ணனின் கால் தொற்றினார்
வைணவர் வாலியோ கவிவிழி திறந்தது
முதல், முருகன் கூர்வேலினைப் பற்றினார்!
பெருந்தகை கம்பன் வள்ளுவனைப்
போல் பெருங்கவிஞர் இருவரும் - பின்னர்
வந்தவரெல்லாம் கவி பாடி முன்னேற,
சாசுவதமாய்ப் பாதச்சுவடு சமைத்தனர்
மணமிகு கவிதைச் சோலையில்,
மறை இறை வரம் கிட்டிற்று,
மனநிறை கவிக்கொடியின் இரு மலராய்
இதழ் விரிந்த கவிஞறேறு இருவருக்கும்.
கவிப் பூஞ்சோலை மடி விழுந்தாலும்,
பண்-புனையும் வரம் எளிதில் கிட்டாது,
என்றும் பாட்டுக்கட்ட முட்டிமோதிக்
காயமாகும், பாதை தொலைத்த ஆடுகளுக்கு!!
குரல் இருந்தால்தான் பாடப் பாட்டு வரும் –
விரலிருந்தால் மட்டும் வீணை மீட்டவரும்!
கோடானு கோடியில் இரட்டையர் நீங்கலாக
இங்கு எவருக்கினி வரும் - எழுத்தாணி வரம்?
- என்.எஸ்.நாராயணன்
அறிமுகம்
தமிழ் இலக்கியம் பற்றிய தகவல்களை வழங்குகிறது.
மின்னஞ்சல்:
தொடர்பு
manthranoviss@gmail.com
© 2024. All rights reserved.
Developed by AptechITServices